Tuesday, March 25, 2025
Home » வருசநாடு அருகே 13ம் நூற்றாண்டு சிவன்கோயில் சிலைகள் கண்டெடுப்பு

வருசநாடு அருகே 13ம் நூற்றாண்டு சிவன்கோயில் சிலைகள் கண்டெடுப்பு

by Suresh

வருசநாடு: வருசநாடு அருகே, கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டம், கடமலைக்குண்டுவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன்தொட்டி உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி ஆகியோர், தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜிஆர்டி பண்ணை உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை, சிவலிங்கம் ஆகிய சிலைகளை கண்டுபிடித்தனர். இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:

பேச்சியம்மன் சிலை: ஆய்வில் கிடைத்த பேச்சியம்மன் சிலையின் தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றை கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் அகன்ற மூக்கு, நீளமான வாய் என பார்ப்போரை அச்சுறுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்வி கடவுளான சரஸ்வதியின் மறுதோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

அய்யனார் சிலை: அய்யனார் சிலையைப் பொறுத்தவரை மண்டலமர்வு என்னும் உத்குடி ஆசனத்தில் வடிவமைக்கப்படும். ஆனால், இங்குள்ள அய்யனார் சிலை மகாராஜா லீலாசனத்தில் வடிக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் சாட்டை போன்ற செண்டையும், இடது கரம் முழங்கால் முட்டி மீதமைந்து பக்கவாட்டில் நீண்டு தொங்கும் நிலையில் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம் மற்றும் முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகாக அமர்ந்திருக்கிறார்.

தட்சிணாமூர்த்தி சிலை:தட்சிணாமூர்த்தி சிலை இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில், கரந்தை மகுடம், கால்களில் வீர கழல், அபய வரத முத்திரையுடன் வலது கையில் மழு, இடது கையில் மான் உருவம் சிதைந்த நிலையில் சாந்த சொரூபத்தில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. ‘தெக்கினான்’ என்றும், தென்முக கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். இந்த சிலைகள் பாண்டியர் காலத்துக்கே உரிய கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கம்: சிவலிங்கம் சிலையின் பத்ம பீடம் (பிரம்மா பகுதி) தாமரைப்பூ கவிழ்ந்த நிலையில், அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கி.பி. 17ம் நூற்றாண்டு கல்வெட்டு

இந்த சிலைகளுக்கு அருகில் கி.பி.17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும், பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இங்கு சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை இக்கோயில் வழிபாட்டில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

17 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi