நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அரசு ஊழியர் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் (விஜிலென்ஸ்) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ..80 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் குமாரதாஸ் (47). திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சியில் மீட்டர் ரீடராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது அங்கு பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் குமாரதாஸ் கடந்த 2018 ஜனவரி மாதம் முதல் 2022 டிசம்பர் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு புகார்கள் சென்றது. இது தொடர்பாக போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.இதற்கிடையே இன்று காலை குமாரதாசின் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் வந்தனர். அப்போது வீட்டில் குமாரதாஸ் இருந்தார்.
பின்னர் வீடு முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சுமார் ரூ..80 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக குமாரதாஸ், அவரது மனைவி சுஜாதா (44) ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.