நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் புலி நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை, ஸ்ரீ மதுரை, தொரப்பள்ளி பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் மற்றும் 30கும் மேற்பட்ட கால்நடைகளை புலி ஒன்று வேட்டையாடியது.
பெரும் போராட்டத்திற்கு பிறகு டி23 என்ற அந்த புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு மைசூரு வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த நிலையில் அதே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் பகுதியில் மீண்டும் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஒரே மாதத்தில் 4 மாடுகளை அந்த புலி வேட்டையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களை வேட்டையாடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் புளியை விரட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.