Wednesday, May 22, 2024
Home » நிறைவான செல்வம் அருளும் லட்சுமி குபேர பூஜை

நிறைவான செல்வம் அருளும் லட்சுமி குபேர பூஜை

by Kalaivani Saravanan

ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்ய வேண்டிய மிகச் சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒருசேரப் பெறமுடியும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த பூஜை சிறப்பு மிக்கது.குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி 1.தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது. வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்கம், வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது. இந்த பூஜையை செய்வது மிக மிக எளிது. ஆனால் இதனால் கிடைக்கப்பெறும் பலன் மிக மிக பெரிது.

லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓதி கலசம் வைத்து பூஜிக்க வேண்டும். சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவதானியங்களை தனித்தனியாக பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் தேங்காய் வைத்திட வேண்டும்.

அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பிக்கலாம். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரமான “குபேராய நமஹ…” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரைப் பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை, லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர். பின் நைவேத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் வைத்து வழிபட்டு, பூஜை முடிந்தவுடன் பெட்டகங்களில் வைத்துவிடலாம்.

இந்த பூஜையை செய்ய இரண்டு நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஒன்று பூஜைக்கு உரிய நாளை தேர்வு செய்ய வேண்டும். ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ தொடர்ந்து ஒரே நாளில் செய்யவேண்டும். அதாவது ஒன்பது வாரம் செய்பவர்கள் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யலாம். அதுபோல் ஒன்பது மாதம் என்றால், பௌர்ணமி நாட்களில் செய்யலாம். யார் பூஜை செய்கிறார்களோ அவர் மட்டும்தான் செய்ய வேண்டும். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம். இதை செய்ய ஒரே மாதிரியான 81 நாணயங்கள் தேவை. உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒரு ரூபாய் நாணயமோ 10 ரூபாய் நாணயமோ எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலான நாணயங்களாக இருக்க வேண்டும்.

பூஜை செய்யும் நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றவேண்டும். அடுத்து இந்த பூஜை தடைபடாமல் இருக்க மகாகணபதியை வணங்க வேண்டும். நல்ல நேரத்தில் ஒரு பலகையில் குபேர யந்திர கோலத்தினை வரைய வேண்டும். அதில் கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வையுங்கள். நாணயம் எண்களை மறைப்பது போல் வைக்கக்கூடாது. நாணயம் மகாலட்சுமியின் அடையாளம். இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

கட்டங்கள் வரையப்பட்டுள்ள பலகையை பூஜை அறையில் வைத்து பின்பு அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றுங்கள். சர்க்கரை கலந்த பாலோ அல்லது பால் பாயசமோ இறைவனுக்கு படையுங்கள். பிறகு வீட்டில் செல்வம் சேரவேண்டும் என்று மகாலட்சுமியிடம் மனதார வேண்டிக்கொண்டு மகாலட்சுமியின் மந்திரத்தை கூறிக்கொண்டே யந்திரத்தில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் பூக் கொண்டு பூஜியுங்கள். பிறகு குபேரனை நன்கு வேண்டிக்கொண்டு தீபாராதனை காட்டுங்கள். அன்று மாலை உங்களால் முடிந்த மங்கள பொருட்களை சுமங்கலிகளுக்கு கொடுங்கள். பின்பு பெருமாள் கோயிலுக்கு சென்று தாயாரை தரிசியுங்கள்.

அடுத்தநாள், குபேர எந்திரத்தில் வைத்த நாணயங்களை எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஈரத் துணி கொண்டு யந்திரம் வரையப்பட்டுள்ள பலகையை துடைத்து விடுங்கள். பிறகு இதே போன்று அடுத்த வாரமோ அடுத்த மாதமோ தொடர்ந்து செய்யுங்கள். ஒன்பது வார அல்லது மாத முடிவில் உங்களிடம் 81 நாணயங்கள் சேர்ந்திருக்கும். அதை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று சிவன் கோயிலில் உள்ள உண்டியலில் போட்டுவிடுங்கள். சிவனே குபேரனுக்கு செல்வம் அனைத்தையும் அளித்தவர்.

அதனாலேயே சிவன் கோயில் உண்டியலில் போடவேண்டும். பின்பு மங்களப் பொருட்களை வைத்து சுமங்கலிகளுக்கு கொடுங்கள். அப்போது மகாலட்சுமியே ஏதாவது ஒரு சுமங்கலி ரூபத்தில் வந்து பொருட்களை பெற்று உங்களை ஆசிர்வதிப்பாள் என்பது நம்பிக்கை. தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்னை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.

மகாலட்சுமி மந்திரம்
மகாலட்சுமியே போற்றி!
மங்கள லட்சுமியே போற்றி!
தீபலட்சுமியே போற்றி!
திருமகள் தாயே போற்றி!
அன்னலட்சுமியே போற்றி!
கிருக லட்சுமியே போற்றி!
நாரண லட்சுமியே போற்றி!
நாயகி லட்சுமியே போற்றி!
ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!

தொகுப்பு: மகி

You may also like

Leave a Comment

15 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi