சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் 85% கமிஷன் பெறப்பட்டு, 15 சதவீத பணமே மக்களுக்கு சென்றடைந்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியிருக்கிறார். உலக நாடுகள் வரிசையில் இந்தியா வல்லரசாக உயர்வதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் காரணமேயொழிய மோடி ஆட்சி காரணமல்ல. மோடியின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரதமர் மோடியின் பிரசாரத்தினால் கர்நாடகத்தில் நடைபெறுகிற 40 சதவீத கமிஷன் ஆட்சியை ஆயிரம் மோடிகள் அணிதிரண்டு வந்தாலும் தேர்தல் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியாது. ராகுல்காந்தியின் சூறாவளி சுற்றுப்பயண பிரசாரத்தினால் பாஜ ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.