Saturday, May 18, 2024
Home » கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்; அரவானின் பிரமாண்ட சிரசு உடன் வலம் வரும் தேர்…ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வழிபாடு..!!

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்; அரவானின் பிரமாண்ட சிரசு உடன் வலம் வரும் தேர்…ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வழிபாடு..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் விமர்சியாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் கடந்த 9ம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23ம் தேதியான நேற்று மாலை சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொண்டு கோயில் அருகில் கற்பூரம் ஏற்றி அரவானின் பெருமைகளை கூறி கும்மி அடித்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இத்திருவிழாவில் குவிந்துள்ளனர். இந்நிலையில், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் அவர்கள் வடம் பிடித்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அரவானின் பிரம்மாண்ட சிரசு உடன் தேரானது வலம் வருகிறது. இந்தத் தேர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பந்தலடிக்கு செல்லும்.

அங்கு அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப் பாடி மகிழ்ச்சியோடு இருந்த திருநங்கைகள் அரவான் களப்பலிக்குப் பிறகு பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து தலைமுழுகி வெள்ளை புடவை உடுத்தி வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து அழுது சோகமாக வீடு திரும்புவார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi