Saturday, July 27, 2024
Home » கொல்கத்தா சாம்பியன் கதை எல்லா புகழும் கம்பீருக்கே: சாதித்த சந்திரகாந்த் சைலன்ட்

கொல்கத்தா சாம்பியன் கதை எல்லா புகழும் கம்பீருக்கே: சாதித்த சந்திரகாந்த் சைலன்ட்

by Ranjith

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஏற்கனவே 2012, 2014ம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற போது கவுதம் கம்பீர் அதன் கேப்டனாக இருந்தார். தொடர்ந்து 2018ம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அணி தடுமாறியதால், பாதியில் ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அத்துடன் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ‘குட் பை’ சொன்னார் கம்பீர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு எம்பியானார். அதன் பிறகு கிரிக்கெட் குறித்தும் , குறிப்பாக கோஹ்லியை கடுமையாக விமர்சிப்பது என தொடர்ந்தார் கருத்து கந்தசாமியாக தொடர்ந்தார் கம்பீர். பின்னர் 2021ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக நியமிககப்பட்டார். ஆறு மாதங்களுக்கு முன்பு கொல்கத்தா அணியுடன் வழிகாட்டியாக கம்பீர் பொறுப்போற்றார்.

கூடவே கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளரான பிரண்டன் மெக்கலாமுக்கு பதிலாக புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரகாந்த் பண்டிட் இந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த முறை கொல்கத்தாவும் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் பயிற்சியாளருக்கு பதிலாக எல்லோரும் கவுதம் கம்பீரை கொண்டாடுகின்றனர். கூடவே இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க வேண்டும் என்று பிசிசிஐ உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

ஆயினும் கோஹ்லிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் என்பதாலும், கம்பீருக்கு மூக்கு மேல் கோபம் அதிகம் என்பதாலும் அந்த பதவிக்கு, அவர் பொறுத்தமா? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அது ஒருப்பக்கம் இருந்தாலும் கொல்கத்தா வெற்றிக்காக, சந்திரகாந்த் பண்டிட்டை கொண்டாடமல் இருப்பது தான் பலருக்கும் ஆச்சர்யம். இத்தனைக்கும் விதர்பா 2018, 2019 ஆண்டுகளிலும், மத்திய பிரதேசம் முதல்முறையாக 2022ம் ஆண்டும் ரஞ்சி கோப்பை வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர்.

மும்பை உட்பட பல வெற்றி அணிகளின் எல்லா வகையான போட்டிகளுக்கும் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இப்போது 10ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்திருக்கிறார். கங்குலி கருத்து: இதுவும் கொல்கத்தா தொடர்பானதுதான். டெல்லி அணியின் வழிகாட்டியும், கொல்கத்தா அணியின் முதல் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று, ‘ஒருவரின் வாழ்க்கையில் பயிற்சியாளர் முக்கியமானவர்.

அவரின் வழிகாட்டுதல், இடைவிடாத பயிற்சி ஆகியவை யாராக இருந்தாலும் அவர்களை களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கட்டமைக்கின்றன. எனவே பயிற்சியாளராக இருந்தாலும் சரி நிறுவனமாக இருந்தாலும் புத்திசாலிதனமாக தேர்வு செய்ய வேண்டும்’ என்று யாரையும் குறிப்பிடாமல் ‘கருத்து’ சொல்லியுள்ளார்.

You may also like

Leave a Comment

eleven − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi