ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், தொடக்க வீரர் விராத் கோஹ்லியின் அபார சதத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர்.
உறுதியுடன் விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 125 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணியின் முதல் 100 ரன் பார்ட்னர்ஷிப் ஆக இது அமைந்தது. கோஹ்லி 39 பந்தில் அரை சதம் அடித்தார். டு பிளெஸ்ஸி 44 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் பட்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 ரன் மட்டுமே எடுத்து பர்கர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சவுரவ் சவுகான் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய கோஹ்லி சதம் விளாசிஅசத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. கோஹ்லி 113 ரன் (72 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), கேமரான் கிரீன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் சாஹல் 2, பர்கர் 1 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது.
* ஐபிஎல் தொடரில் கோஹ்லி தனது 8வது சதத்தை நேற்று பதிவு செய்தார்.
* கடைசியாக விளையாடிய 7 ஐபிஎல் இன்னிங்சில் கோஹ்லி 3 சதங்களை விளாசி உள்ளார்.
* ஐபிஎல் போட்டிகளில் 7500 ரன் என்ற சாதனை மைல் கல்லையும் கோஹ்லி நேற்று கடந்தார்.