Wednesday, May 29, 2024
Home » கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30,31 தேதிகளில் நேரில் ஆஜராக உத்தரவு!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30,31 தேதிகளில் நேரில் ஆஜராக உத்தரவு!!

by Porselvi

சென்னை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30,31 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்பபாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரிக்கப்பட்ட போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறிய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தல் வழங்க அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் விடுமுறை, சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பிறகு ஆஜராக தயாராக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது, இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஜனவரி 30, 31ம் தேதிகளில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்ய எடப்பாடி பழனிசாமி ஆஜராக ஆணையிட்டனர்.

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi