கொடைக்கானல் : கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானை அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதனருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானை, காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள விளைபொருட்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் பல லட்சம் கடனாக பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும், விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவது தொடர்கிறது. நேற்று கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டுயானை புகுந்தது. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து விளைபொருட்களை சேதப்படுத்தியது.
தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை நுழைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.