கொடைக்கானல். : கொடைக்கானலில் கோடை விழா வரும் 26ம் தேதி மலர் கண்காட்சியுடன் துவங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை கவர ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, கோடை விழா, படகு போட்டிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். நடப்பாண்டுக்கான கோடை விழா மே 26ம் தேதி பிரையண்ட் பூங்காவில் 60வது மலர் கண்காட்சியுடன் துவங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், பல இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் பல வண்ண மற்றும் பல வகை மலர்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
அத்துடன் விலங்குகள், பறவைகள், அரண்மனைகள் என பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்காவிலும் மலர் உருவங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். துவக்க விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, ராமச்சந்திரன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.