![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/5-100.jpg?type=webp&quality=80)
கொடைக்கானல்: கொடைக்கானலில் மீண்டும் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பேரிடம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தளங்களை வனத்துறையினர் அனுமதி பெற்று சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இன்றும் அங்கு குட்டியுடன் யானை நடமாடிவருவதை கண்காணித்த வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் இயற்கை அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையினரின் வாகனத்தில் சவாரி செய்தபடி வன விலங்குகளை புகைபடம் எடுத்து ரசித்த சுற்றுலா பயணிகளை காட்டு யானை துரத்தியுள்ளது.
யானையை கண்டு ஓட்டுநர் பின்னோக்கி இயக்கியும் துரத்துவதை கைவிடாத யானை சவாரி வாகனத்தின் முன்பாக கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரவு நேரத்தில் உலா வரும் ஒற்றை யானையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள வாகன சோதனை சாவடி அருகே நேற்று உலா வந்த யானை அதன் அருகிலிருந்த பல கடையையும் சேதப்படுத்தி சென்றது. இதனால் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.