திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பேரிஜம் ஏரியில் தொடங்கப்பட்ட படகு சவாரி கைவிடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பது தான் பேரிஜம் ஏரி. இந்த ஏரியானது ஆசியாவிலேயே இரண்டாவது நன்னீர் ஏரியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது பெரியகுளம் மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள மக்களுக்கு குடிநீராக செல்கிறது. தற்போது வரை இந்த இடமானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவே இருந்து வருகிறது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு சிறப்பு அனுமதி சீட்டு வனத்துறை மூலமாக வாங்கி தான் செல்ல வேண்டும். இவ்வாறு இருக்கையில், பேரிஜம் ஏரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு படகு சவாரியை வனத்துறை தொடங்கி இருந்தது. பெரியகுளம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதால் படகு சவாரி மேற்கொள்ளக்கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு பேரிஜம் ஏரியில் படகு சவாரி செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர்.
இதன் அடிப்படையில் பழனி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று தெரிவித்திருந்த நிலையில், பேரிஜம் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து தற்போது படகு சவாரி நிறுத்தப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.