*விலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
கொடைக்கானல் : கொடைக்கானலில் பெருமாள் மலை அருகே, வனப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால், வனவிலங்குகள் பலியாகும் அபாய நிலை உருவாகியுள்ளது.
கொடைக்கானல் அடுக்கம் கிராம பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தது பெருமாள் மலை. இதற்கு அடுத்ததாக சில கிராமங்கள் உள்ளன. இவற்றில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் வனப்பகுதியை அடுத்துள்ள பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. வனப்பகுதிக்கு அருகே இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் வன விலங்குகள் அவற்றில் கிடக்கும் உணவு பொருட்களை உண்ணும் நிலை ஏற்படுகிறது. இந்த குப்பை கழிவுகளில் அதிக அளவில் பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இவற்றை உணவு பொருட்களுடன் சேர்த்து வனவிலங்குகள் உண்கின்றன. இதனால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையும், அடுக்கம் கிராம பஞ்சாயத்து நிர்வாகமும் இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிடில் குப்பை சேகரிக்கும இடத்திற்குள் வன விலங்குகள் நுழைய முடியாத வகையில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும். இந்த நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளாவிட்டால் பல வன விலங்குகள் குப்பை கழிவுகளால் உயிரிழக்கும் நிலை உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை.