*மலைகளின் இளவரசிக்கு மலர் கிரீடம்
கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் அழகாய் பூத்துக் குலுங்கும் ஆர்னமென்டல் செர்ரி பூக்கள் கண்களுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.
மலைகளின் இளவரசி எனப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில், மலர்க் கிரீடம் போல பிரையண்ட் பூங்காவில் ஆர்னமென்டல் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதைப் பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் செல்போனில் படம் பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த ஆண்டு துவக்கம் முதலே கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தே காணப்பட்டது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், இப்போதே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. ஆண்டுதோறும் கொடைக்கானலில் மலர்க்கண்காட்சி நடைபெறும். இதற்காக பிரையண்ட் பூங்காவில் பல லட்சம் மலர்ச்செடி நாற்றுகளை நடுவர். இதன்படி இந்தாண்டு நடக்கும் மலர்க்கண்காட்சிக்கு, பிரையண்ட் பூங்காவில் இரண்டாம் கட்டமாக பல லட்சம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு வகையான மலர்கள் உள்ளன.
இந்நிலையில், பிரையண்ட் பூங்காவில் பனி சீசனில் பூத்துக் குலுங்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இவைகள் சிறிய மரம் போல படர்ந்து விரிந்து நிற்கின்றன. இந்த செடியில் இலைகளே இல்லாமல் மலர்கள் பூத்துக் குலுங்குவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பூங்காவில் கண்ணாடி மாளிகையின் பின்னணியில் ஆர்னமெண்டல் செர்ரி மலர்கள் ரம்மியமாய் காட்சியளிக்கின்றன.