திண்டுக்கல்: இந்தியாவிலேயே முதன்முறையாக கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற பயோ பிளாக் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. சுற்றுலா தளமான கொடைக்கானலில் இதய பகுதியாக இருப்பது நட்சத்திர ஏரி. இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்வதும் ஏரியை சைக்கிளில் வலம் வருவதும் சுற்றுலா பயணிகள் வாடிக்கை. சிறப்பு வாய்ந்த நட்சத்திர ஏரியில் கழிவுகள் கலக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ஏரியை ஆய்வு செய்து சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி இறங்கியது. ஏரியை சுற்றிலும் வேலி அமைத்து நடைபாதை, நீர் ஊற்றுகள், படகு குழாம் என ரூ.24 கோடி செலவில் ஏரியை நகராட்சி நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி ஜப்பானின் பயோ பிளாக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஏரி நீரை நன்னீராகும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உதவியுடன் சிறிய தொட்டியை வடிவமைத்து பயோ பிளாக் என்ற உயிரி தொகுதி கற்களை ஏரியில் மிதக்க விட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது. சோதனை வெற்றி பெற்றதால் நட்சத்திர ஏரியில் 16,000 பயோ பிளாக் கற்களை மிதக்க விட நகராட்சி திட்டமிட்டுள்ளது. கற்கள் மீது பூசப்பட்டுள்ள ரசாயனம் தேவையற்ற நீர் தாவர இயற்கை முறையில் அகற்றி ஏரி நீரை நன்னீராக்கும் என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள்.