* தயிர் சாதம் செய்வதற்கு சாதத்தை வேகவிடும்போது தண்ணீருடன் சிறிது பாலும் கலந்து குழைய வேகவிட்டு எடுத்து, லேசாக மசித்து பச்சை மிளகாய், மோர்மிளகாய், கடுகு இவைகளைத் தாளித்து புளிப்பில்லாத தயிர் சிறிதளவு சேர்த்து கிளற சுவையான தயிர்சாதம் தயார்.
* காராபூந்தி, மிக்சர் போன்றவைகளை செய்துவிட்டு, உடனே டப்பாக்களில் போடாமல், நியூஸ் பேப்பரில் போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்து எடுத்து டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும்.
* ஈயப்பாத்திரத்தில் ரசமும், மண்சட்டியில் வத்தக்குழம்பும் வெண்கல
உருளியில் அரிசி உப்புமாவும் செய்தால் தனி ருசியாக இருக்கும்.
* ரசம் செய்து அடுப்பிலிருந்து இறக்கும்போது சிறிது நெய்விட்டு கடுகு தாளித்து சேர்த்தால் ரசம் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும். – ஷீலா ரமேஷ், வளசரவாக்கம்.
* பீன்ஸ், டபுள் பீன்ஸ், மொச்சை போன்ற பருப்புகளை வேக வைக்கும்போது முதலிலேயே உப்பு போடக்கூடாது. வேக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.
* வேர்க்கடலையை வறுப்பதுபோல கூழ்வற்றலையும் எண்ணெய் இல்லாமல் மணலில் வறுத்தெடுக்கலாம். பெரிதாக பொரிந்து வரும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காயை சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சுபோல மிருதுவாக இருக்கும்.
* புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கும்போது வெந்தயத்துடன் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்தால் புதுமணம் தரும்.
* பட்சணங்கள் தயாரிக்கும் மாவில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்தால் பட்சணம் நல்ல வாசனையாக இருக்கும்.
* பரோட்டா அல்லது நான் செய்ய மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் சோடாவை ஊற்றி பிசைந்தால் பரோட்டா அல்லது நான் பஞ்சுபோல மிருதுவாக
இருக்கும்.
* உடல் நலமில்லாமல் இருந்து சாப்பிடும்போது வாய்க்கு ருசி தெரியாது. அப்போது நார்த்தங்காய் வத்தல் சிறிது சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
* பூண்டு, வெங்காயம் உரித்த வாசனை கையில் போக சிறிது பேக்கிங் பவுடர் தூள் தேய்த்து கழுவினால்
வாசனைப் போய்விடும்.
* எந்த சிப்ஸ் செய்தாலும், நெய்யில் காரம் கலந்து பிசறினால், காரம்உதிராமல் நெய்யில் பொரித்தது போல வாசனையாகவும் இருக்கும்.
* பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லி மாவு கலந்து செய்தால் பஜ்ஜி உப்பி சுவை கூடுதலாக இருக்கும்.
* மீன் குழம்பு வைக்கும்போது, கடுகை சிறிதளவு அரைத்து மீனில் தடவி 5 நிமிடம் வைத்திருந்து பின்னர் குழம்பில் சேர்த்தால் மீன் உடைந்து போகாமல் இருக்கும்.
* இட்லியை சிறு துண்டுகளாக்கி வெண்ணெயில் பொரித்துப் போட்டால் சூப் புது சுவை தரும்.
* கோஸ், காலிஃப்ளவர் வேக வைக்கும்போது சிறிது சர்க்கரை அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் பச்சை வாசனை வராது.
* புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.– அ.யாழினிபர்வதம், சென்னை.
* உளுந்துவடை செய்யும்போது வடை மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
* கேரட் அல்வா, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகளை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளற வருவதோடு, நன்கு சுருண்டு சரியான பதத்தில் வரும்.
* தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையைச் சிறிதளவு பொடி செய்து பக்கோடா மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
* ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன்பு கொதிக்கும் எண்ணெயை சிறிதளவு ஜாடியில் ஊற்றிவிட்டு பின்பு ஊறுகாய் போட்டு மூடினால் விரைவில் பூசணம் பிடிக்காமல் இருக்கும்.
* அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அருகம்புல்லில் தாது உப்புகளும், வைட்டமின்களும் நிறைந்து இருக்கிறது.
* வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் காய்ச்சல் வரவே வராது.
* பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காயை பால் காய்ச்சும்போதே அதனுடன் சேர்க்கவும். இவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், மைதா மாவை பூரி மாவு பதத்திற்கு பிசைந்து பின்னர் சப்பாத்திப் போல திரட்டி, சதுர துண்டுகளாக்கி எண்ணெய்யில் பொரித்தெடுத்து பாகில் சேர்த்தால் சுவையான மைதா பிஸ்கட் தயார்.
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
* சூப், கிரேவி போன்றவற்றில் சேர்ப்பதற்கு கிரீம் கைவசம் இல்லையென்றால் வெண்ணெயில் சிறிது பாலைக் கலந்து நன்கு கலக்கிய பின் கிரீமுக்குப் பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன் படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சிறிதளவு சேர்த்தால் சுவையான சாக்லேட் பால் அல்வா தயார். – கவிதா சரவணன், திருச்சி.