Wednesday, May 22, 2024
Home » கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

by Lavanya

* தயிர் சாதம் செய்வதற்கு சாதத்தை வேகவிடும்போது தண்ணீருடன் சிறிது பாலும் கலந்து குழைய வேகவிட்டு எடுத்து, லேசாக மசித்து பச்சை மிளகாய், மோர்மிளகாய், கடுகு இவைகளைத் தாளித்து புளிப்பில்லாத தயிர் சிறிதளவு சேர்த்து கிளற சுவையான தயிர்சாதம் தயார்.
* காராபூந்தி, மிக்சர் போன்றவைகளை செய்துவிட்டு, உடனே டப்பாக்களில் போடாமல், நியூஸ் பேப்பரில் போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்து எடுத்து டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும்.
* ஈயப்பாத்திரத்தில் ரசமும், மண்சட்டியில் வத்தக்குழம்பும் வெண்கல
உருளியில் அரிசி உப்புமாவும் செய்தால் தனி ருசியாக இருக்கும்.
* ரசம் செய்து அடுப்பிலிருந்து இறக்கும்போது சிறிது நெய்விட்டு கடுகு தாளித்து சேர்த்தால் ரசம் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும். – ஷீலா ரமேஷ், வளசரவாக்கம்.
* பீன்ஸ், டபுள் பீன்ஸ், மொச்சை போன்ற பருப்புகளை வேக வைக்கும்போது முதலிலேயே உப்பு போடக்கூடாது. வேக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.
* வேர்க்கடலையை வறுப்பதுபோல கூழ்வற்றலையும் எண்ணெய் இல்லாமல் மணலில் வறுத்தெடுக்கலாம். பெரிதாக பொரிந்து வரும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காயை சேர்த்து அரைத்தால் தோசை பஞ்சுபோல மிருதுவாக இருக்கும்.
* புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கும்போது வெந்தயத்துடன் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்தால் புதுமணம் தரும்.
* பட்சணங்கள் தயாரிக்கும் மாவில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு பிசைந்தால் பட்சணம் நல்ல வாசனையாக இருக்கும்.
* பரோட்டா அல்லது நான் செய்ய மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் சோடாவை ஊற்றி பிசைந்தால் பரோட்டா அல்லது நான் பஞ்சுபோல மிருதுவாக
இருக்கும்.
* உடல் நலமில்லாமல் இருந்து சாப்பிடும்போது வாய்க்கு ருசி தெரியாது. அப்போது நார்த்தங்காய் வத்தல் சிறிது சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
* பூண்டு, வெங்காயம் உரித்த வாசனை கையில் போக சிறிது பேக்கிங் பவுடர் தூள் தேய்த்து கழுவினால்
வாசனைப் போய்விடும்.
* எந்த சிப்ஸ் செய்தாலும், நெய்யில் காரம் கலந்து பிசறினால், காரம்உதிராமல் நெய்யில் பொரித்தது போல வாசனையாகவும் இருக்கும்.
* பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லி மாவு கலந்து செய்தால் பஜ்ஜி உப்பி சுவை கூடுதலாக இருக்கும்.
* மீன் குழம்பு வைக்கும்போது, கடுகை சிறிதளவு அரைத்து மீனில் தடவி 5 நிமிடம் வைத்திருந்து பின்னர் குழம்பில் சேர்த்தால் மீன் உடைந்து போகாமல் இருக்கும்.
* இட்லியை சிறு துண்டுகளாக்கி வெண்ணெயில் பொரித்துப் போட்டால் சூப் புது சுவை தரும்.
* கோஸ், காலிஃப்ளவர் வேக வைக்கும்போது சிறிது சர்க்கரை அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் பச்சை வாசனை வராது.
* புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணமாகும்.– அ.யாழினிபர்வதம், சென்னை.
* உளுந்துவடை செய்யும்போது வடை மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
* கேரட் அல்வா, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகளை நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளற வருவதோடு, நன்கு சுருண்டு சரியான பதத்தில் வரும்.
* தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையைச் சிறிதளவு பொடி செய்து பக்கோடா மாவுடன் சேர்த்து பிசைந்தால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
* ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன்பு கொதிக்கும் எண்ணெயை சிறிதளவு ஜாடியில் ஊற்றிவிட்டு பின்பு ஊறுகாய் போட்டு மூடினால் விரைவில் பூசணம் பிடிக்காமல் இருக்கும்.
* அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அருகம்புல்லில் தாது உப்புகளும், வைட்டமின்களும் நிறைந்து இருக்கிறது.
* வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் காய்ச்சல் வரவே வராது.
* பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காயை பால் காய்ச்சும்போதே அதனுடன் சேர்க்கவும். இவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், மைதா மாவை பூரி மாவு பதத்திற்கு பிசைந்து பின்னர் சப்பாத்திப் போல திரட்டி, சதுர துண்டுகளாக்கி எண்ணெய்யில் பொரித்தெடுத்து பாகில் சேர்த்தால் சுவையான மைதா பிஸ்கட் தயார்.
* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமையை ஊற வைத்து சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
* சூப், கிரேவி போன்றவற்றில் சேர்ப்பதற்கு கிரீம் கைவசம் இல்லையென்றால் வெண்ணெயில் சிறிது பாலைக் கலந்து நன்கு கலக்கிய பின் கிரீமுக்குப் பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன் படுத்தலாம்.
* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சிறிதளவு சேர்த்தால் சுவையான சாக்லேட் பால் அல்வா தயார். – கவிதா சரவணன், திருச்சி.

You may also like

Leave a Comment

13 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi