*தோசைக்கு அரைத்த மாவில் 50 கிராம் கொண்டைக்கடலை, 50 கிராம் பட்டாணியை ஊறவைத்து அரைத்து எடுத்து தோசை மாவுடன் சேர்த்து தோசை சுட்டால் மொறு மொறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்தது போல் இருக்கும்.
*தோசை சுடும்போது கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் இருந்தால் கோலியளவு புளியை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொண்டு அதனால் எண்ணெயைத் தொட்டுக் கல்லில் தேய்த்து பிறகு மாவை வார்த்தால் தோசை நன்றாக வரும்.
*போளி செய்வதற்கு பொதுவாக கடலைப்பருப்பை உபயோகப்படுத்துவார்கள். அதற்கு பதிலாக துவரம்பருப்பை உபயோகித்து போளி தயார் செய்தால் ருசியும், மணமும் நன்றாக இருக்கும்.
*வெஜிடபிள் சாலட் செய்யும்போது அதிகமாக நீர் சேர்த்துவிட்டால் சில பிரெட் துண்டுகளை சேர்த்தால், நீர் உறிஞ்சிக் கொள்வதுடன் தனிருசியும் கிடைக்கும்.
*வழக்கமான அடைமாவுடன் தக்காளி சேர்த்து அரைக்கவும். மாவு வழிக்கும் முன் துருவிய கேரட் அல்லது பீட்ரூட் சேர்த்து அரைத்து தோசைகளாக ஊற்றி வார்த்தெடுக்கவும். கலர்புல்லான, சத்தான தோசை தயார்.
*சமோசாவுக்கு மாவு பிசையும்போது மைதாமாவை சலித்து ஒரு மெல்லிய துணியில் கட்டி இட்லித் தட்டின் மேல் வைத்து 5 நிமிடங்கள் வரை ஆவி பிடித்து பின் எடுத்து உப்பு, சீரகம், டால்டா சேர்த்துப் பிசைந்து செய்தால் மொறுமொறுப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
*கீரை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் உள்ள சத்து கெடாமல் இருக்க வேண்டுமானால், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்பே இவற்றைப் போட்டு வேகவைக்க வேண்டும்.
*காரட்டையும், வெங்காயத்தையும் எண்ணெயில் வதக்கும்போது கொஞ்சம் சர்க்கரையைத் தூவினால் நன்றாக வதங்கி பொன்னிறமாகிவிடும்.
– பா.பரத்.