லண்டன்: கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு அந்நாட்டின் புதிய மன்னராக 3ம் சார்லஸ் முடிசூடினார். 75 வயதாகும் அவர் கடந்த சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், மன்னர் 3ம் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கான அறிக்கையில், ‘சமீபத்திய சிகிச்சையின் போது மன்னர் 3ம் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான வழக்கமான சிகிச்சை மன்னர் இன்று தொடங்கி உள்ளார். இதனால் இனி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதே சமயம் அத்தியாவசிய ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார். ’ என கூறப்பட்டுள்ளது.
மன்னர் சார்லசுக்கு எந்த விதமான புற்றுநோய் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
* லண்டன் திரும்பினார் இளவரசர் ஹாரி
இங்கிலாந்து மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட மோதலில் இளவரசர் பட்டத்தை துறந்து குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற இளவரசர் ஹாரி நேற்று உடனடியாக லண்டன் திரும்பினார்.