மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் யுகேஜி படித்து முடித்த மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விவேகானந்தா வித்யாலயா குழும பள்ளி தலைவர் லோகராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஹரிநாக்ஷி லோகராஜ், முதுநிலை முதல்வர் மங்கையர்கரசி, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சீதாலட்சுமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வில் வித்தை வீராங்கனை சஞ்சனா கலந்து கொண்டு சிறுவர் சிறுமியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவ – மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர் சஞ்சனா மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவேகானந்தா பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.