நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் முத்துபெருமாள் (34). இவர் நேற்று முன்தினம் ரெட்டியார்பட்டி 4 வழிச்சாலை பைக்கில் சென்றபோது பைக்கில் வந்த 3 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முத்துபெருமாளை கொன்ற 3 பேரில் இருவரை முன்னீர்பள்ளத்தில் பாதுகாப்புக்காக நின்ற போலீசார் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டியன், முத்துகிருஷ்ணன் என்பதும், தப்பியோடியவர் இதே பகுதியைச் சேர்ந்த உய்க்காட்டான் என்பதும் தெரியவந்தது. இவரை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இவ்வழக்கில் கைதான இசக்கிபாண்டியன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,‘தெற்கு காரசேரியை சேர்ந்தவர்கள் மெயின் ரோட்டிற்கு வருவதற்கு புளியங்குளம் ஊரின் வழியாக வர வேண்டும். அவ்வழியாக வரும் போது எங்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர். எங்களை தொடர்ந்து அவமானம் செய்து வந்தனர்.
இதனால் அந்த ஊரைச் சேர்ந்த முத்துபெருமாளை வெட்டிக்கொன்றோம்,’என்று தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட முத்துபெருமாளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகை வழங்கக் கோரி நேற்று 2வது நாளாக முத்துபெருமாளின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.