திருவனந்தபுரம்: முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், கேரள ஜனபக்ஷம் கட்சித் தலைவருமான பி.சி. ஜார்ஜ், தன்னுடைய கட்சியை பாஜவில் இணைத்தார். கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அரசு தலைமைக் கொறடாவாக இருந்தவர் பி.சி. ஜார்ஜ். கோட்டயம் மாவட்டம் பூஞ்ஞார் தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர் முதலில் கேரளா காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இதன் பின்னர் கட்சியிலிருந்து விலகி ஜனபக்ஷம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை தொடங்கினார். இவரது மகன் ஷான் ஜார்ஜ் இக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று பி.சி.ஜார்ஜ் தன்னுடைய மகன் ஷான் ஜார்ஜுடன் பாஜவில் இணைந்தார். கட்சியையும் பாஜ.வில் இணைத்தார். அப்போது ஒன்றிய இணை அமைச்சர்கள் வி.முரளீதரன், ராஜீவ் சந்திரசேகர், பாஜ மூத்த தலைவர் பிரகாஷ் ஜவ்டேகர், பாஜ தேசிய செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான அனில் அந்தோனி ஆகியோர் உடன் இருந்தனர்.