திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிக மிக குறைவாகவே பருவமழை பெய்துள்ளது. கேரளாவில் இந்த வருடம் இதுவரை தென்மேற்கு பருவ மழை பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. வழக்கமாக இங்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த 4 மாதங்களிலும் இடைவிடாது மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் கடந்த மூன்று மாதங்களில் வழக்கத்தைவிட 55 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை மிகவும் குறைந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் தான் இந்த மாதத்தில் மிகவும் குறைவாக மழை பெய்துள்ளது.இந்த மாவட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையில் கடந்த மாதம் 6 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் 7 சதவீதமும், மலப்புரம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் 10 சதவீதமும் மட்டுமே மழை பெய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 13 சதவீதம் மட்டுமே மழை பெய்துள்ளது .