திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. வரும் 8ம் தேதிக்கு முன் மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். கடந்த வருடம் மே 29ம் தேதி பருவமழை தொடங்கியது. 2021ல் மே 31ம் தேதியும், 2020ல் ஜூன் 1ம் தேதியும், 2019ல் ஜூன் 8ம் தேதியும், 2018ல் மே 29ம் தேதியும் பருவமழை தொடங்கியது. இந்த வருடம் ஜூன் 4ம் தேதி (நேற்று) பருவமழை தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகளும் கேரளாவில் தென்படத் தொடங்கின. ஆனால் திடீரென தென்மேற்கு பருவக் காற்றின் வலு குறைந்தது. ஆகவே இதுவரை கேரளாவில் பருவமழை தொடங்கவில்லை. இந்தநிலையில் அரபிக் கடலில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் 8ம் தேதிக்குள் கேரளாவில் பருவ மழை தொடங்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தமுறை கேரளாவில் சராசரி மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிக அளவில் உருவானால் மழையின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.