சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற கேரள தலைமறைவு குற்றவாளியை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது சிராஜுதீன் (35). இவர் மீது கடந்த ஆண்டு ஆலப்புழா காவல் நிலையத்தில், போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தல், கூட்டு சதி உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சாகுல் ஹமீது சிராஜுதீனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். தொடர்ந்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர் மீது எல்ஓசி போடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்ல வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து கொண்டிருந்தனர்.
அந்த விமானத்தில் மலேசியா செல்வதற்காக கேரள மாநில போலீசால் தேடப்பட்டு வரும் சாகுல் ஹமீது சிராஜுதீன் வந்தார். அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், அவர் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவரை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தனிப்படை போலீசார் சாகுல் ஹமீது சிராஜுதீனை கேரளாவுக்கு அழைத்து செல்வதற்காக சென்னை விமான நிலையம் வருகின்றனர்.