புதுடெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்திலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டம் கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை சட்ட விதிகள் அரசியலமைப்புக்கு விரோதமானது. மதம் மற்றும் நாட்டை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்துவது பாரபட்சமானது,நியாயமற்றது, மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த அவசரமும் ஏற்படவில்லை. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.