செங்கோட்டை: தென்காசியில் இருந்து கேரள மாநிலம் ஈரேட்டு பேட்டை என்கிற பகுதிக்கு கடந்த 23ம் தேதி சென்ற கேரள அரசு பேருந்தை ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் பயணித்த சென்னையை சேர்ந்த அப்துல் மாலிக் (40) என்பவரது டிராவல் பேக்கில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சுமார் ரூ.25 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடிக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்துல் மாலிக், பத்தினம்திட்டையை சேர்ந்த ஒருவரிடம் கொடுப்பதற்காக ரூ.25 லட்சத்தை கொண்டு செல்வதும், இந்த பணத்திற்கு எந்த உரிய ஆவணங்களும் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார், அந்நபரையும், பணத்தையும் தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தென்மலை போலீசார், அப்துல் மாலிக்கிடம் இருந்த ரூ. 25 லட்சம் ஹவாலா பணமா என்று விசாரித்து வருகின்றனர்.