திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பறவைக் காய்ச்சல் பாதிப்புள்ள வாத்துகளின் மாதிரி போபால் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கிவரும் சில கோழி பண்ணைகளில் கோழி, வாத்து போன்ற பறவைகள் கூட்டமாக இறந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பறவைகளை அழித்து வருகின்றனர். மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
H5N1 என்பது பறவைகளை அதிகம் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும். ஆனால் அது மனிதர்களையும் பாதிக்கலாம். பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடி தொடர்பு, அவற்றின் கழிவுகள் அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் வைரஸ் பரவுவதற்கான வழிகளாகும். இந்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு இன்னும் பரவவில்லை.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், உடல்வலி, தலைவலி, சோர்வு, மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அறிகுறிகளாகும். வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். அறிகுறிகள் 2 முதல் 8 நாட்களுக்குள் தொடங்கி சாதாரண காய்ச்சல் போல் இருக்கும். இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தசைவலி, தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.