கேரளா: கேரளாவில் கொல்லம் மாவட்டம் உலியகோவில் என்ற இடத்தில் அரசு மருத்துவமனைகளுக்கான மருந்து குடோனில் இடி தாக்கி தீ விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் உலியகோவில் தேவி கோயிலுக்கு அருகே கேரள மருத்துவ சேவை கழகத்தின் மாவட்ட மருந்துக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில், மருந்துகள் மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த பாதுகாப்பு ஊழியர்கள் சம்பவம் குறித்து அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரார்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் இல்லை என்றாலும், விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துப்பொருட்கள் எரிந்து சேதமாகின. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து கிடங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.