Friday, May 17, 2024
Home » கேளம்பாக்கம் அருகே மனைவி கழுத்து நெரித்து படுகொலை: நாடகமாடிய பாதிரியார் கைது

கேளம்பாக்கம் அருகே மனைவி கழுத்து நெரித்து படுகொலை: நாடகமாடிய பாதிரியார் கைது

by MuthuKumar

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக நாடகமாடி இறுதி சடங்கு செய்ய முயன்ற பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகேயுள்ள குணாபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவரை அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ் (35) என்பவருக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இருவரும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் பகுதியில் உள்ள மலைத்தெருவில் குடியேறினர். விமல்ராஜ், பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விமல்ராஜின் பெற்றோர் மேடவாக்கத்தை அடுத்துள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற விமல்ராஜ், மனைவி வைஷாலி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றபோது இறந்துவிட்டதாகவும், இதனால் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய விமல்ராஜ் பெற்றோர், சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு இறுதி சடங்கு செய்வதற்காக வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று மாலை மும்பையில் இருந்து வைஷாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால்குமார் ஆகியோர் ஒட்டியம்பாக்கம் வந்துள்ளனர். அப்போது, வைஷாலியின் கழுத்தில் காயம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் அவசர போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இத்தகவல் தாழம்பூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி தாழம்பூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காரில் ஏற்றியபோது காயம் ஏற்பட்டு வழியிலேயே இறந்துவிட்டதால் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும் விமல்ராஜ் தெரிவித்துள்ளார். அவரது தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் போலீசார் காவல்நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில், தனக்கும், மனைவிக்கும் திருமணம் ஆனதிலிருந்து தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தகராறு முற்றியதில் அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்தேன். கொலையை மறைப்பதற்காக உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடினேன் என போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து ஒட்டியம்பாக்கம் வீட்டில் இருந்த வைஷாலியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையை பாதிரியார் விமல்ராஜ் மட்டுமே செய்தாரா? அல்லது அவருக்கு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேளம்பாக்கம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

5 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi