* எதிர்கட்சிகளை மிரட்டவே… வைகோ ‘பளீச்’
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் இந்த தேர்தல். பாஜ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான் டெல்லி முதல்வரை கைது செய்துள்ளது. சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கூட மறுத்து வருகிறார்கள்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். எனவே ஜனநாயகத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம் இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
* தேர்தல் தோல்வி பயம்: -ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது பாஜ அரசின் கீழ்த்தரமான அரசியல் கொடுங்கோன்மை நடவடிக்கை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டி, அமலாக்கத்துறை மூலம், அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளது மோடியின் பாசிச அரசு.
காங்கிரசின் வங்கி கணக்குகளை முடக்குவது, எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பது போன்ற கொடுங்கோல் செயல்களின் தொடர்ச்சியே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதும். இத்தகைய எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் பாஜ உலவுவதற்கு தேர்தல் தோல்வி பயமே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.