தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 20 மக்களவை தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் பாஜ வெளியிட்டுள்ளது. அதில் தென்சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசை, நீலகிரியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, கோவையில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில், எல்.முருகன் கடந்தமாதம் தான், ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர்கள் இருவரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், ஏற்கனவே வகிக்கும் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே இப்போது ஏன் தேர்தல் களத்தில் குதிக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதுபற்றி பாஜ நிர்வாகிகள் கூறுகையில், ‘தமிழகத்தை பொறுத்தவரை பாஜவுக்கு வெற்றி முக்கியமல்ல. 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இந்த முறை வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்திக்காட்ட வேண்டும் என்பது தான் அண்ணாமலையின் இலக்கு.
இதனால் தான் பிரபலமான, பணபலம் படைத்தவர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார். வேட்பாளர் தேர்வு முழுக்க முழுக்க அண்ணாமலை சாய்ஸ்தான். எதிர்பாராதவகையில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக மூக்கறுத்து விட்டது. எத்தனையோ முறை அழைத்தும் கூட்டணிக்கு வரவில்லை. தமிழகத்தில் தோற்றாலும் பரவாயில்லை.
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டவே குறைந்தது 10 தொகுதிகளிலாவது 2வது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதும் அண்ணாமலையின் திட்டம். பிரதமர் மோடியை தமிழகத்துக்கு அடிக்கடி பிரசாரத்துக்கு அழைத்து வருவதும் இதற்காகத்தான்,’ என்றனர். அண்ணாமலையின் 2வது இடம் பிளானால் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழ்நாட்டில் போட்டியிடும் ஒரே கட்சி பாஜ தான் என அரசியல் நோக்கர்கள் கலாய்த்து வருகின்றனர்.