Wednesday, May 15, 2024
Home » காஷ்மீரில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் 3 உள்ளூர்வாசிகள் மர்ம சாவு: பூஞ்ச், ரஜோரி ​​பகுதியில் இன்டர்நெட் தடை, 2 மாவட்டங்களில் கூடுதல் வீரர்கள் குவிப்பு

காஷ்மீரில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் 3 உள்ளூர்வாசிகள் மர்ம சாவு: பூஞ்ச், ரஜோரி ​​பகுதியில் இன்டர்நெட் தடை, 2 மாவட்டங்களில் கூடுதல் வீரர்கள் குவிப்பு

by Ranjith

பூஞ்ச்: காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், பூஞ்ச் பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளூர்வாசிகள் 3 பேரின் சடலம் மீட்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் கடந்த வியாழக்கிழமை 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.அங்கு பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இதற்கிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் 3 உள்ளூர்வாசிகள் உடல்கள் குறிப்பிட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் டோபா பீர் கிராமத்தில் வசிக்கும் சபிர் உசேன் (43), முகமது சவ்கத் (27), ஷபீர் அகமது (32) என்பது தெரிய வந்தது. அவர்களின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 3 உள்ளூர்வாசிகள் மர்மமான முறையில் இறந்ததால் காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர்வாசிகள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க அங்கு இன்டர்நெட் தடை செய்யப்பட்டது. பதற்றம் நீடிக்ப்பதால் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்த ராணுவம் உத்தர விட்டுள்ளது.

3 உள்ளூர்வாசிகள் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை: பூஞ்ச் ​​மாவட்டத்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது இறந்த உள்ளூர்வாசிகள் 3 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையினரின் எக்ஸ் பதிவில், ‘பூஞ்ச் ​​மாவட்டத்தின் பாப்லியாஸில் 3 உள்ளூர்வாசிகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மருத்துவ சோதனைக்குபிறகு இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இறந்த 3 பேரின் குடும்பத்திற்கும் அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. மேலும் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் கருணை பணி நியமனம் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 12 பேர் கதி என்ன?
காஷ்மீரில் ராணுவம் பிடித்து சென்ற 3 உள்ளூர்வாசிகள் மர்ம முறையில் இறந்தது தொடர்பாக நேற்று பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில்,’ ராணுவம் 15 பேரை பிடித்துச்சென்றது. அதில் 3 பேர் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 12 பேர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அவர்களை ராணுவ வீரர்கள் கொடுமைப்படுத்திய வீடியோ நெஞ்சை உருக்குகிறது’ என்றார்.

* சர்வதேச எல்லையில் தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் கவுர் செக்டாரில் சர்வதேச எல்லைப்பகுதியில் 4 தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை வீரர்கள் கண்டறிந்தனர். தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவன் உயிரிழந்தான். அவனது உடலை சக தீவிரவாதிகள் பாகிஸ்தான் பக்கம் இழுத்து சென்று மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

* தோடா ராணுவ முகாம் தீ: 2 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் காஷ்மீர் சம்பாவைச் சேர்ந்த பர்ஷோதம் (55) மற்றும் கதுவாவைச் சேர்ந்த சோம் ராஜ் (45) ஆகியோர் பலியானார்கள். ராணுவ முகாமில் தையல் கடை நடத்தி வந்தனர்.

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi