கரூர் : ‘‘கரூர் அருகே பெரியாண்டாங்கோயில் குகை வழிப்பாதையில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியால் நாள்தோறும் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உட்பட கனரக வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு போக்குவரத்து போலீசார் உடனடியாக தீர்வு காண வேண்டும்,’’ என, அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் பெரியாண்டாங்கோயில் பிரிவு அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சின்னாண்டாங்கோயில் மற்றும் பெரியார் வளைவு, பெரியாண்டாங்கோயில் போன்ற பகுதிகளுக்கு பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குகை வழிப்பாதையின் வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.அதிகளவு இந்த குகை வழிப்பாதையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், சர்வீஸ் சாலைகளில் இருந்து கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் குகை வழிப்பாதையில் பயணிக்கிறது.
இதில், அவ்வப்போது கனரக வாகனங்களும் உள்ளே வந்து செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது.இந்த பகுதியில் கனரக வாகன போக்குவரத்து அதிகம் நடைபெற்று வரும் நிலையில் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சூழல் உள்ளது. அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இவ்வழியை பயன்படுத்தவே அஞ்சுகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு குகை வழிப்பாதையில் வாகனங்கள் எளிதாக செல்ல தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.