சோமனூர் : கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை ஆலயத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.கருமத்தம்பட்டியில் புனித ஜெபமாலை ஆலயம் உள்ளது. இதன் கீழ் உள்ள 23 அன்பியங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து நேற்று மத ஒற்றுமைக்காக சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா நடத்தினர். இதற்காக ஆலயத்தின் முன்பு பொங்கல் வைத்து கரும்பு உள்ளிட்ட தோரணங்கள் அமைத்து, மண் பானையில் பொங்கல் வைத்தனர்.
இதில் இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கும்மியடித்தல், உரியடித்தல் நடனம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. ஆலயத்தின் பங்குதந்தை அருண் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். உலக நன்மைக்காகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும், நாடு நலம் பெறவும், மக்கள் வளம் பெறவும், தொழில் சிறக்கவும் இந்த சமத்துவ பொங்கல் விழா நடத்தப்படுவதாக கிறிஸ்துவ மக்கள் தெரிவித்தனர்.