Wednesday, May 22, 2024
Home » கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம் அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் பவனி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம் அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் பவனி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

by Ranjith

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 3ம் நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள், சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. மேலும், அண்ணாமலையார் கோயில் கருவறை எதிரில் உள்ள பிரதோஷ மண்டபத்தில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக வெளி பிரகாரம் வரை பக்தர்களின் தரிசன வரிசை நீண்டிருந்தது.

கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள கலையரங்கத்தில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 11 மணியளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 9 மணியளவில் 3ம் நாள் இரவு உற்சவம் நடந்தது. அப்போது, அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 3ம் பிரகாரத்தை வலம் வந்த பஞ்சமூர்த்திகள், ராஜகோபுரம் எதிரே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் (பெரிய நாயகர்), வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாடவீதியில் பவனி வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு வரை மாடவீதியில் திரண்டிருந்து பஞ்சமூர்த்திகளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi