பெங்களூரு : கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கான தடையை நீக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கலவி நிறுவனங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு முந்தைய பாஜக அரசு தடை விதித்து இருந்தது. இது குறித்த சுற்றறிக்கை கல்வித்துறை சார்பாக அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது.
பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை செய்யும் சுற்றறிக்கையை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. விரைவில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமிய பெண்கள், ஹிஜாப் அணிந்து செல்ல வழிவகை செய்யப்படும் என கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.