பெங்களூரு: தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வறட்சி பாதித்த கர்நாடக மாநிலத்துக்கு ஒன்றிய அரசு உடனே நிவாரண நிதியை விடுவிக்க உத்தரவிடகோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி, ‘வறட்சி குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒரு மாதத்தில் ஒன்றிய அரசு நிவாரணம் விடுவித்திருக்க வேண்டும்’ என்று வாதிட்டார். ஒன்றிய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், ‘நிவாரண நிதி விடுவிக்காதது குறித்து ஒன்றிய அரசிடம் ஆலோசனை பெறப்படும் என்றனர்.
இதையடுத்து, ‘ஒன்றிய அரசு நிதி விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பல்வேறு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. எனவே கர்நாடகா மனு மீது பதிலளிக்க முதலில் நோட்டீஸ் பிறப்பிக்கலாம்‘ என்றனர். உடனே துஷார் மேத்தா, ‘விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கவும், அதற்குள் ஒன்றிய அரசிடம் உரிய பதிலை பெற்று பதிவிடுகிறேன். மாநில அரசு நீதிமன்றத்தை அணுகியதற்கு பதில் உரிய அதிகாரிகளிடம் பிரச்னையை கொண்டு சென்றிருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும்’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘பல்வேறு மாநிலங்கள் இதே பிரச்னையுடன் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்’ என்றனர்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘இது மாதிரி வளர்ந்துவரும் போக்கு சரியில்லை. இதற்காக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டால், பத்திரிகைகளுக்கு செய்தியாகிவிடும். அடுத்த விசாரணையின் போது ஒன்றிய அரசிடம் இருந்து உரிய பதில் பெற்று பதிவிடுகிறேன்’ என்றார். இதையடுத்து, ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே போட்டி வளர்ந்துவிட கூடாது. எனவே அடுத்த இரண்டு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.