பெங்களூரு: கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி. குமார் தனது பொறுப்பை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஒசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது எஸ்.டி.குமார் இதனை அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே கர்நாடகாவில் அதிமுகவை வைத்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக சார்பில் போட்டியிட அனுமதிக்கவில்லை. கட்சிக்காக தீவிரமாக உழைத்திருந்த நாங்கள், தெளிவாக செயல்பட்டிருந்த நாங்கள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை கர்நாடக மாநில செயலாளர் என்ற அடிப்படையில் அளித்திருந்தேன்.
அந்த விருப்பமனுவை பெற்றுக்கொண்டவர்கள் நேர் காணலும் நடத்தினார்கள். விருப்பமனு கொடுக்கப்பட்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் அதிமுக மறைமுகமாக பாஜகவை ஆதரிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. கர்நாடகத்தில் யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டேன் என தெரிவித்தார்.