பெங்களூரு: கர்நாடக மேலவை உறுப்பினர் பதவிக்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தை சேர்ந்த கே. பத்மராஜன் நேற்று வேட்புனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து விதான சவுதாவில் நிருபர்களிடம் கே.பத்மராஜன் கூறியதாவது:
கடந்த 1988ல் தொடங்கிய எனது தேர்தல் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். ஆந்திராவில் நடந்த தேர்தலில் என்னை சிலர் கடத்தி சென்றனர். டயர், மோதிரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சின்னங்கள் எனக்கு கிடைத்தது. அது போல் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், வாஜ்பாய் மட்டும் இன்றி முன்னாள் முதல்வர்கள் பலருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன்.
தேர்தலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். பணம், செல்வாக்கு இருப்பவர் மட்டும் தேர்தலில் நிற்க முடியும் என்பது தவறானது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன். இதுவரை, ரூ.1 கோடி வரை டெபாசிட் பணத்தை இழந்துள்ளேன். நான் கட்டிய பணம் ஒன்றிய அரசு கருவூலத்திற்கு சென்றுள்ளது’இவ்வாறு அவர் கூறினார்.