காரைக்குடி : காரைக்குடி அருகே 5 எருமை மாடுகள், 30 ஆடுகளை பலியிடும் வினோத திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கழனிவாசல் வேடன் நகரில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வமான நருவிழி காளிக்கு ஆண்டுதோறும் எருமை மாடு மற்றும் ஆடுகள் பலியிட்டு அதிலிருந்து வரும் ரத்தத்தை குடித்து திருவிழா கொண்டாடுவர்.
இதன்படி, இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை வரை நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நரிக்குறவர் சமூக மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழாவையொட்டி நருவிழி காளிக்கு 5 எருமை மாடுகள் மற்றும் 30 ஆடுகள் பலியிடப்பட்டன. பின் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏராளமானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதுகுறித்து நரிக்குறவ சமூக மக்கள் கூறுகையில், ‘‘இந்த திருவிழா கொண்டாடுவதன் மூலம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். மேலும் தொழில் நன்றாக நடக்கும் என்பதும் எங்களது நம்பிக்கை. இதனால், ஆண்டுதோறும் இந்த விழாவை கொண்டாடி வருகிறோம். பலியிடப்படும் இறைச்சியை பகிர்ந்து எடுத்து கொள்வோம்’’ என்றனர்.