கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணனும், அக்காவும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரணியலை அடுத்த தாந்தவிலையில் பாபு என்பவர் தனது 2 தங்கைகளுடன் வசித்து வந்தார். தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பாபு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாபுவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம், பக்கத்தினர் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முதல் தங்கையான உஷா பார்வதி கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவருக்கு அருகில் பாபு மின்விசிறியில் தூக்கிட்டும் மற்றொரு தங்கை ஸ்ரீ தேவி சமயலறையில் தூக்கிட்டும் சடலமாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கடவுள் பக்தி அதிகம் நிறைந்தவரான பாபு மாந்திரீக மூட நம்பிக்கையால் தற்கொலை செய்து கொண்டு தங்கைகளை கொலைசெய்தாரா? அல்லது திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.