*அறங்காவலர் குழு தலைவர் தகவல்
சித்தூர் : காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் அடுத்த மாதம் 18ம்தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கப்பட உள்ளதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் தெரிவித்தார்.
சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் பிரமோற்சவ போஸ்டர் வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடேஷ் வரவேற்றார். இதில், அறங்காவலர் குழு தலைவர் மோகன் பேசியதாவது:
அடுத்த மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கப்படுகிறது. அக்டோபர் 8ம்தேதி வரை தொடர்ந்து 21 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறும். மற்ற கோயில்களில் பிரமோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். ஆனால், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் மட்டும் 21 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். பிரமோற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதேபோல், ஒவ்வொரு வாகனத்தை ஒவ்வொரு வகுப்பை சேர்ந்த மக்கள் பூஜை செய்து தொடங்கி வைப்பது வழக்கம்.
தற்போது பிரமோற்சவ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிரமோற்சவத்தை காண ஆந்திரா மட்டும் இன்றி தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் லட்சக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரக்கூடும். இதனால், பக்தர்கள் எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தற்போதையிலிருந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு கார் மற்றும் பஸ் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.