சென்னை: கனியாமூர் பள்ளி சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. இதன் காரணமாக அப்பள்ளியின் வாகனங்கள், அறைகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்றக்கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சம்பவம் நடந்து 20 மாதங்கள் கடந்தும் மாணவியின் தாய், வன்முறையை தூண்டியவர்கள் எவரையும் விசாரணை செய்யவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.