போபால்: கமல் நாத் காங்கிரசை விட்டு எங்கும் செல்லவில்லை என திக் விஜய் சிங் உறுதியுடன் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்தும், அவரது மகன் நாகுல் நாத்தும் காங்கிரஸ் கட்சில் இருந்து விலகி பாஜவில் சேரவுள்ளதாக கடந்த இருதினங்களாக செய்திகள் வௌியாகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கமல் நாத் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல் நாத் அந்த கட்சியை விட்டு வௌியே போக மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் போபாலில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ நெருக்கடியை கமல்நாத் சமாளிப்பார் என்று அவர் மேலும் தெரிவித்தார். மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி கூறுகையில், கமல்நாத்திடம் நான் பேசினேன். அவர் ஊடக செய்திகள் உண்மையில்லை. தான் எப்போதும் காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என்று உறுதியாக தெரிவித்தார் என்றார்.
அதே நேரத்தில் கமல்நாத் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.