பள்ளிப்பட்டு: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது புகழை பரப்பவும், நதிகளை இணைக்க வலியுறுத்தியும் நாடு முழுவதுமான சைக்கிள் பயணத்தை திமுக தொண்டர் அம்மையார்குப்பத்தில் நேற்று தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான சஞ்சீவி(55) திமுக தொண்டர் ஆவார். இவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது புகழை பரப்பவும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதுமான சைக்கிள் பயணத்தை நேற்று தொடங்கினார்.
முன்னதாக அம்மையார்குப்பம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். அவருக்கு ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். சைக்கிள் பயணத்தை தொடங்கிய சஞ்சீவி, சாலையில் சென்ற பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, நதிகள் இணைப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது கலைஞரின் புகழ் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தான் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவதாக சஞ்சீவி கூறினார்.