திருவள்ளூர்: கடம்பத்தூரில் 20 நாட்கள் சிறப்பு கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில் கடம்பத்தூரில் 20 நாட்கள் சிறப்பு கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாமில் 6 முதல் 18 வயது வரை உள்ள 90 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி முகாமில் தினமும் மாணவர்களுக்கு முட்டை, பால், பழங்கள் போன்ற சத்துணவு தந்து பல புதிய முறை உத்திகளை பயிற்சியாளர்கள் கற்றுக் கொடுத்தனர். மேலும், தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் ஹேமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி முகாமின் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் கடம்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்க மாவட்ட செயலாளர் குப்புசாமி பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் சீருடைகளை வழங்கினார். இதில், கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு கடம்பத்தூர் கைப்பந்து சங்கத்தின் சார்பில் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இறுதியில், தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் சட்ட ஆலோசகர் பிரகாஷ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை கடம்பத்தூர் கைப்பந்து சங்கத்தினர் செய்திருந்தனர்.