நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று முன்தினம் இரவு கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இதுநாள் வரை பாஜ, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யாமல் இருந்தனர். ஆனால் தேர்தல் தேதி தொடங்கிய உடன் விமர்சனம் செய்து பேசுகிறார்கள். இது நம்மை திசை திருப்புவதற்காக இரண்டு பேரும் நடிப்பதாகும். திருவிழாவில் பெண்கள், குழந்தைகளிடம் நகைகளை திருட போகும் நபர் முதலில் திருடன், திருடன் என்று கத்துவான்.
நகைகளை திருடிய பின்னர் அதே திருடன் சப்தம் போடும் போது திருடனும் அதோ ஓடுகிறான் என கத்தி எல்லோரையும் திசைதிருப்பி ஓடவிடுவான். நகையை பறிகொடுத்தவர்களும் வேறு ஒரு திசையை நோக்கி ஓடுவார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு திருடன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுவான். அது போலதான் மோடியும் கடந்த 10 ஆண்டு காலமாக பிரதமராக இருந்தார். அப்போது எல்லாம் கச்சத்தீவை மீட்போம் என பேசவே இல்லை. தேர்தல் திருவிழா தொடங்கியவுடன் கச்சத்தீவை பேசி அதை மீட்போம் என சொல்கிறார். கடந்த 10 ஆண்டு காலமாக மோடி எங்கே போனார். அதனால் தான் மோடி ஒரு திருவிழா திருடர் என கூறினேன். சமூக நீதிக்கும், பாஜவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன சம்பந்தம். அது போலதான் பாஜவிற்கும், பாமகவிற்கும் கூட்டணி அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
* ‘ஏமாந்திட்டியே சரத்குமாரு…’
மதுரை மாவட்டம், செக்கானூரணியில் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ‘‘இந்த தொகுதியில் விஜய பிரபாகரனை எதிர்த்து போட்டியிடும், ராதிகா சரத்குமார் ஒரு சீட்டிற்காக தனது கட்சியை அடமானம் வைத்துவிட்டு போட்டியிடுகிறார். பாஜவின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன, தத்துவம் என்ன, கட்சிகளின் தலைவர்கள் யார், நிறுவனத்தலைவர் யார் என்பதை அவர் கூறவேண்டும். எந்த தகவல்களும் தெரியாமல் பாஜ சார்பில் ராதிகா போட்டியிடுகிறார். ஏமாந்திட்டியே சரத்குமாரு… என்று விளம்பரம் போல இப்போது அவர்கள் நிலைமை. ஆனால் எங்கள் வேட்பாளர் விஜயபிரபாகரன் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இளைஞனாக இருக்கும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டு வந்துள்ளார். எனவே அவரை வெற்றி பெற செய்யுங்கள்’’ என்றார்.