கொழும்பு: “கச்சத்தீவை மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வரும் தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என இலங்கை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற போகிறது.
தேர்தல் நேரத்தில் இதுபோன்று அரசியல் கட்சிகள் பேசுவது இயல்பே. கச்சத்தீவுக்குள் இலங்கை மீனவர்கள் நுழைய முடியாது என்பதையும், வளமான அந்த பகுதிக்கு இலங்கை எவ்வித உரிமையையும் கோர கூடாது என்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில், கச்சத்தீவை பாதுகாக்க தன் நாட்டு நலன்களின் அடிப்படையில் இந்தியா இதுபோன்று செயல்படுவதாக நான் நினைக்கிறேன்.
1974ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இருநாட்டு மீனவர்களும் கச்சத்தீவில் மீன் பிடிக்க முடியும். ஆனால் 1976ம் ஆண்டு ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட அந்த ஒப்பந்தப்படி இருநாட்டு மீனவர்களும் கச்சத்தீவில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவை மீட்பது தொடர்பாக இந்தியாவில் இருந்து வௌிவரும் அறிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது” என்று கூறினார்.