சென்னை: மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சட்டமன்ற பேரவையில் 6-9-2021 அன்று “சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும், ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்” என அறிவித்தார். அதனைச் செயல்படுத்தும் வகையில், 2022ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வி.என்.சாமி பத்திரிகை துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றுள்ளவர், இவர் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர். 9-6-1931 அன்று பிறந்தவர். 92 ஆண்டுகள் நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியாரின் உதவியாளராக திகழ்ந்தவர். தமிழ்நாடு, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றி 1989ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றுள்ளார்.